ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா..

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஈரானின் சிரிக், மினாப் ஆகிய நகரங்களில் பல இடங்களில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா போரால் வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாமல் இழுபறி நீடித்துக்கொண்டே வருகிறது. பேச்சுவார்த்தைக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஆனால் இதனைமீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், அமெரிக்காவின் அப்பாசி ரக நவீன ஹெலிகாப்டர் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் தான் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், இதற்கு உடனடியாக அமெரிக்கா பதிலடியும் கொடுக்க ஆரம்பித்தது.

ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய ஈரான், அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்து இருந்தது. இந்த பதற்றமான சூழலில், ஈரானின் பல்வேறு இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சிரிக் மற்றும் மினாப் ஆகிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா சரமாரியாக தாக்கியது. ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டின் முக்கிய மையங்கள் குறிவைக்கப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பீட்டர் ஹெக்சேத் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. எண்ணெய் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது என்றும், அந்தப் பாதையில் செல்ல முயற்சிக்கும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இரண்டு கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படை தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள ஊட்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதே நேரத்தில், அமெரிக்க செண்ட்காம் இதை மறுத்தது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் தொடர்ந்து இயல்பாகச் சென்று வருவதாக செண்ட்காம் தெரிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்து இருப்பதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது.அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க்கா கூறி வந்த நிலையில் தற்போது திடீரென மோதல் அதிகரித்து இருப்பதால் பேச்சு வார்த்தைக்கு பெரும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கலாம் என்பதால் மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.