அச்சுறுத்தும் கொரோனா… மீண்டும் முகக்கவசம் அணிந்து பணியாற்றும் தொழிலாளர்கள்..!

கோவை: கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-
மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து முகக்கவசம் அணிந்து பணியாற்றுவது, சமூக இடைவெளி பின்பற்றுதல்,அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொழிலாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளோம் என்றார்.

குறு, சிறு வார்ப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது,
உருமாறிய கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். கோவையில் உள்ள வார்ப்பட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
முன்பு சிறப்பு முகாம்கள் நடத்தியதை போல பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அலட்சியம் காட்டினால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தொழில் நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றனர்.