பயணிகளின் கவனத்திற்கு.. கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு பழனி – பொள்ளாச்சி ரயில் வேகம் அதிகரிப்பு..!

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை – மங்களூர் விரைவு ரயில் ( எண்:16159) இன்று முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும். காரைக்கால் – எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 16187) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன், மங்களூர்- கோவை விரைவு ரயில் (எண்: 16324) 2, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் நாளை முதல் இயக்கப்படும். மங்களூர் – சென்னை விரைவு ரயில் (எண்: 16160) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன், கோவை – மங்களூர் விரைவு ரயில் (எண்: 16323) இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் நாளை மறுநாள் 26-ந் தேதி முதல் இயக்கப்படும்.

இதேபோன்று கோவை – பொள்ளாச்சி- பழனி – திண்டுக்கல் வழித்தடத்தில் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்குமாறு, பயணிகள் தரப்பில் தொடா்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை காரணமாக, ரயிலின் வேகம் திண்டுக்கல் – பழனி இடையே மணிக்கு 75 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டராகவும், பழனி – பொள்ளாச்சி இடையே மணிக்கு 70 கிலோ மீட்டா் வேகத்தில் இருந்து 100 கிலோ மீட்டராகவும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, முன்பு மதுரையில் தினமும் காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு கோவையைச் சென்றடையும் மதுரை – கோவை விரைவு ரயில் (எண்:16722), மதுரையில் தற்போது காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு 30 நிமிடங்கள் முன்பாகவே பிற்பகல் 12.15 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.

கோவையில் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரைக்குச் சென்றடையும் கோவை – மதுரை விரைவு ரயில் (எண்: 16721), கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக 2.40 மணிக்குப் புறப்பட்டு வழக்கமாகச் சென்றடையும் 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். இந்த ரயில் வழக்கமாக நின்று செல்லும் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பத்துரை, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூா், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.