தருமபுரியில் மூன்று கல்குவாரிகளை அகற்ற கோரி 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம்..!!

மாரண்டஹள்ளி அருகே கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மூன்று கல்குவாரிகளை அகற்ற வலியுறுத்தி 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சூடனூர், பாலப்பனள்ளி, தண்டே குப்பம், எல்லப்பன் பாறை, கூலிகானூர், ஜிட்டாண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி மலைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில கல்குவாரிகள் முறையான உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றது. இதனால் அடிக்கடி கற்களை உடைப்பதற்காக ராட்சத வெடிகள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு இருந்து கிரானைட் கற்கள், ஜல்லிக்கற்கள், எம்சன்ட் உள்ளிட்ட பொருட்களை எடுப்பதற்காக தினமும் எண்ணற்ற வாகனங்கள் இந்த கிராமங்கள் வழியாக செல்கின்றன.

இந்த கல்குவாரிகள் செயல்படுவதால், சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் விவசாயமாக இருக்கும் நிலையில், இந்த கிரானைட் கற்கள் மூலம் விவசாயம் முழுவதும் அழியும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு யானை, மான், காட்டெருமை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மலைகளிலும் வனப்பகுதிகளிலும் இருந்து வருகின்றன. இந்த வெடிச்சத்தத்தால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. இதனால் கிராமங்களை சுற்றியுள்ள கல்குவாரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, கனிம வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், இன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து மூன்று கல்குவாரிகளையும் மூட வலியுறுத்தி கிராமத்திலேயே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கல்குவாரிகள் செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும், மேலும் ராட்சத வெடிகளால் வீடுகள் அதிர்வடைவது, முதியவர்கள் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வனவிலங்குகளுக்கு பேர் ஆபத்து ஏற்படும் சூழலில் இருந்து வருகிறது. எனவே இந்த கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளம்பர பதாகைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் சூடனூர், பாலப்பனல்லி, தண்டகுப்பம், எல்லப்பன் பாறை, கூலிகானூர், ஜிட்டாண்டள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.