திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வரின் மருமகன் சபரீசன் சிறப்பு யாகம்.!

முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்திய 3 மணி நேர சிறப்பு யாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதனால் பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று சிறப்பு யாகம் செய்துள்ளார். இதற்காக தடுப்பு அரண் அமைத்து யாகம் நடந்ததால் பொதுமக்கள் யாரும் வள்ளி குகைக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரம் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த கோயிலில் வசதி படைத்தவர்களும் , அரசியல்வாதிகளும் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவது வழக்கம். ஆனால் கோயில் வளாகத்தில் சில ஆண்டுகளாக யாகம் நடத்த அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் பகுதியிலேயே யாகம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் நிலம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர்கள் நேற்று திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்தினர். இந்த யாகத்தில் சபரீசன் கலந்து கொண்டிருக்கிறார்.

கோவிலில் இருந்து வள்ளி குகை செல்லும் கடற்கரை ஒட்டிய சிறிய பாதையை வழிமறித்து சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. காலை 7:00 மணி முதல் 10 மணி வரைக்கும் இந்த யாகம் நடந்திருக்கிறது. இந்த யாகத்தால் பொதுமக்கள் யாரும் வள்ளிக்குகைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. யாகம் நடந்த பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு ஊழியர்கள், இந்து அறநிலையத்துறையின் குவிந்து இருந்துள்ளனர்.

இத்தகைய செயலுக்கு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆலய மேம்பாட்டு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சிறப்பு யாகம் முடிந்ததும் வடக்கு வாசல் வழியாக சபரீசனும் அவரது தரப்பினரும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்திருக்கிறார்கள்.

முதல்வர் மருமகனின் சிறப்பு யாகத்தால் தங்களது வழிபாடுக்கு தடை ஏற்படுகிறது என்று அங்கு வந்த பக்தர்கள் பலரும் கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.