கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷாமுபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவதால் இவர்கள் அடிக்கடி சென்னை கொண்டு செல்லப்பட்டு என். ஐ. ஏ .கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர் .கோவையில் இவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜமேஷாமுபின் கூட்டாளிகள் அசாருதீன், அப்சர் கான், உட்பட 6 பேரையும் போலீசார் நேற்று மதியம் வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். இதற்கான நடவடிக்கையை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டனர்.இனி புழல் சிறையில் இருந்து என். ஐ .ஏ .கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் . இந்த வழக்கில் கடந்த வாரம் கைதான தவ்பீக் உட்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜமேஷாமுபின் கூட்டாளிகள் மொத்தம் 9 பேர் சென்னை புழல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.’