மாற்றுத்திறனாளி சித்த வைத்தியர் வெட்டி படுகொலை – போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை.!!

கோவை : சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 60) இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார் .இதையடுத்து அவர் கடந்த 4 ஆண்டுகளாக கீரனத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார் .மேலும் அவர் சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான செல்வமணி சக்கர நாற்காலியில் பயணம் செய்து வந்துள்ளார் . இந்த நிலையில் நேற்று மாலை செல்வமணி தங்கியிருந்த தோட்டத்தின் அருகில் சிலர் பூப்பறிக்க சென்றனர். அப்போது அங்கு செல்வமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தனியாக இருந்து செல்வமணியை மர்ம மனிதர்கள் தலையில் பின்புறம் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.’ பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனையில் செல்வமணி கொலை நடந்ததா? அல்லது யாருக்காவது சித்த மருந்து கொடுத்த விவகாரத்தில் கொலை நடந்ததா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சித்த வைத்தியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது..