ரவுடியை சுட்டுக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 4 பேர் கோவை சிறையில் அடைப்பு..!

கோவை :  மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 20 20 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார் . பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இவருக்கும் மற்றொரு கூலிப்படையை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தியபாண்டி கடந்த 12ஆம் தேதி இரவு கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சஞ்சய் குமார் தலைமையிலான கும்பல் இந்து கொலையை செய்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து தப்பி ஓடிய அந்த கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சஞ்சய் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான காஜா உசேன், ஆல்வின், சபூல் கான் ஆகியோர் சரணடைந்தனர். இதையடுத்து 4பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர் .இது குறித்த தகவல் அறிந்த கோவை தனிப்படை போலீசார் வேலூருக்கு சென்றனர் .பின்னர் அவர்கள் சரண் அடைந்த 4 பேரையும் கோவைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். பிறகு 4 பேரையும் போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் . இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய். காஜா உசேன் ஆல்வின் சபூர் கான் ஆகிய 4 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 3-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு இன்று ( செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது..