31 ஆண்டு கால போராட்டம் தான் பேரறிவாளன் விடுதலை-அவரது தாய் அற்புதம்மாள் பேட்டி.!!

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் படிப்பகத்தில் பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணனை, பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வருகை தந்தனர்.

அப்போது முன்னதாக படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு பேரறிவாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சேர்ந்து விடுதலையை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் கூறியதாவது:-
31 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதைவிட மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம் என்பதை தான் இங்கு சொல்ல வேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் பெரிய வேலை சாத்தியப்பட்டது. இது மகிழ்ச்சியாக உள்ளது. பேரறிவாளன் விடுதலையானது உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த எல்லாரையும் மனப்பூர்வமாக சந்திக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கு வந்தோம். அவர் விடுதலையாக வேண்டும். எந்த தவறும் செய்யாமல் இந்த வழக்கில் உள்ள இவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து எங்களுக்காக ஆதரவு தந்தவர்கள் எல்லோறையும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று நன்றி கூற வேண்டும் என்று நினைத்தோம்.
அதனால் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். என்னுடைய பிரச்சினை என்னவாக இருந்தாலும் ராமகிருஷ்ணனிடம் கூறுவேன். அவரும் எனக்கு சில விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார். இவற்றை செய்யலாம், இவற்றை செய்ய வேண்டாம் என்றெல்லாம் கூறி உள்ளார்.
இது ஒரு அமைதிப் போராட்டம். நாம் யாரையும் எதிர்க்கவில்லை. வன்முறையை கையாளவில்லை. நமது குறிக்கோள் என்னவென்றால் மாநில உரிமை வீணாகப் போகிறது. இதன் மூலம் இவர்களுடைய விடுதலை தடுக்கப்படுகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நீண்ட பெரிய சட்டப் போராட்டம் நடத்திேனாம்.
அதன் மூலம் விடுதலையாகியுள்ளார். மற்றவர்களுக்கும் இது வாய்ப்பாக இருக்கும். அதனால் நாம் அமைதியாக இருக்க வேண்டும். இதேபோல் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம். விடுதலைக்காக அனைத்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்கள் என சாதாரண தொண்டர்கள் கூட குரல் கொடுத்துள்ளனர். முகம் தெரியாத அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
விடிவைத் தேடித் தந்தவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை பெற்றுள்ளோம். 31 ஆண்டுகளுக்குப் பின்னால் விடுதலையடைந்து இருக்கின்ற பேரறிவாளனுக்கும், தமிழ்நாட்டு உரிமைகளுக்கு ஒரு விடிவைத் தேடித் தந்தவர் அற்புதம்மாள்.
கோவை மாவட்டம் முழுவதும் பேரறிவாளனுக்கு ஆதரவாக, பல்வேறு வகையில் அனைத்து கட்சிகளும் இங்கு போராடி இருக்கின்றோம். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும், மாணவர்களும் போராடினார்கள்.
மக்கள் போராட்டத்தால் இந்த இயக்கங்களின் போராட்டங்களால் இன்று பேரறிவாளனை பெற்றிருக்கிறோம். மேலும் 6 பேரையும் விடுதலை செய்கின்ற வரைக்கும் நாம் விழிப்போடு இருந்து பாடுபடுவோம் என்றார்.
பேரறிவாளன் கூறும்போது,
31 ஆண்டுகால நீதிக்கான போராட்டத்தில் தமிழகத்தில், குறிப்பாக இந்த கோவையில் கு. ராமகிருஷ்ணனின் போராட்டமும், அவர் இந்த வழக்கில் காட்டிய அக்கறையும் அனைவருக்கும் தெரியும். அதற்காக அவரை சந்தித்து நன்றி சொல்ல வந்துள்ளேன்.
மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் மற்றும் அனைத்து கட்சியைச் சார்ந்தவர்கள் என அனைவரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள்.எனவே அவர்கள் எல்லோரையும் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கின்றேன் என்றார்.