ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் 2 துணை ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை..

திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் பாதுகாப்பு பணியில் இருந்து 2 துணை ராணுவ வீரர்கள் திடீரென தூக்குப்போட்டும், துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் ரேடார் பிரிவில் சிஐஎஸ்எப் துணை ராணுவ வீரரான சிந்தாமணி நேற்று முன்தினம் காலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பல மாதங்கள் நீண்ட விடுப்புக்கு பிறகு கடந்த 10ம் தேதி பணிக்கு திரும்பியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் ஸ்ரீஹரிகோட்டா முதல் நுழைவு வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சி-ஷிப்டில் பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் சிங், தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயர் அதிகாரிகளின் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? வேறு ஏதாவது காரணமா? அல்லது சொந்த பிரச்சனையா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரனை நடைபெற்று வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து துணை ராணுவ வீரர்கள் 2 பேர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.