18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்.. 2 பேருக்கு மறுவாழ்வு தந்த கொடையுள்ளம்..!

சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்தது.

இதையடுத்து, பெற்றோரின் அனுமதியுடன், குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டதே, இதுவரை மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராகக் கருதப்பட்டது. தற்போது 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளர் பட்டியலில் ஆந்திர மாநில குழந்தை முதலிடத்தை பிடித்துள்ளது.