பேரூர் அருகே தோட்டத்தில் புகுந்து 12 யானைகள் அட்டகாசம் – பீதியில் மக்கள்..!

கோவை பேரூர் அருகே உள்ள தீத்தி பாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் தோட்டம் உள்ளது .இங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு 5 குட்டியானை உட்பட 12 யானைகள் புகுந்தது. முதலில் நாகர்பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் புல்லை மேய்ந்தது. பின்னர் நடராஜ்க்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் புகுந்து 2 ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. மேலும் அந்ததோட்டத்தில் தக்காளி பயிர் செல்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அவருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 5 குட்டியானைகள் உள்பட 12 யானைகள் ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.