ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது – புகழ்ந்து பேசிய ரஜினி..!

சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன்.
ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது. காரணம், அவரது அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை.எம்.ஜி.ஆருக்கு, ‘புரட்சித் தலைவர்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். நடிகராக இருந்து, மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து, முதல்வரானார். மிகப்பெரிய புரட்சி செய்து, புரட்சித் தலைவரானார்.அவரது மறைவுக்கு பின், அ.தி.மு.க., பிளவுபட்ட போது, பெரிய தலைவர்கள், அனுபவசாலிகள் பலர் இருந்த நிலையிலும், தனி பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி, அதை இன்னும் பலப்படுத்தி, பெரிய கட்சியாக்கி, பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர் ஜெயலலிதா.இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும், ஜெயலலிதாவை மதித்தனர்; அவரின் திறமையை பார்த்து வியந்தனர்.

ஒரு காலகட்டத்தில், எனக்கும், அவருக்கும் ஒரு மனஸ்தாபம். அவருக்கு எதிராக, நான் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின், என் மகள் திருமணத்திற்கு அவரை அழைக்க போய், பழையதை மறந்து, என் மகள் திருமணத்தை நடத்திக் கொடுத்தார். பெரிய கருணை உள்ளம் கொண்டவர். அவரது நாமம் வாழ்க; நன்றி.இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.