இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு தேர்தல் பரப்புரை.!!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யும் கணக்கு கண்காணிக்கப்படுவதாகவும், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள 13 புகார்களுக்கு பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 688 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 547 வழக்குகள் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுவரை 64 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 430 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. வாக்குச் சாவடியில் 1,206 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 5 மணிக்கு பரப்புரை ஓய்கிறது. எனவே, அதற்கு பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விவகாரத்தை தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ் ஆப், முகநூல், டிவிட்டர் போன்ற ஊடகங்கள் வாயிலாக பரப்பக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.