‘யுபிஐ’ மூலம் இனி பணம் அனுப்பலாம்… இந்திய அஞ்சல் துறை புதிய வசதி அறிமுகம்..!!

திவு தபால் மற்றும் பார்சல்களுக்கு ‘யுபிஐ க்யூஆர் கோடு’ ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது; “மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு சேவையை அறிமுகம் செய்து வருகிறது.

மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யுபிஐ க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும் இந்த சேவை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமானது.

முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யுபிஐ க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.

இதன்மூலம் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19-ம் தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 5,341 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்” என்றார்.