ஜப்பான், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தமிட்டுள்ளனர்…

சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மினாரு கிஷாரா, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய அதிக திறன்கொண்ட போர் விமானங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாதது எனக் கூறியுள்ளார். ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உருவாகிவரும் இந்த நேரத்தில் இந்த புதிய போர் விமானத்தை உருவாக்குவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு தனியாக ஒரு போர் விமானத்தை உருவாக்க தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் தேவைப்படும். மூன்று நாடுகளும் இணைந்து இந்த போர் விமானத்தை உருவாக்குவது அந்த வகையிலான நெருக்கடிகளை குறைக்கிறது எனவும் கூறியுள்ளார்

மிட்சுபிஷி எஃப் – எக்ஸ் (Mitsubishi F-X)என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு மூன்று நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெறும். இதற்கு ஜப்பான் தலைமையேற்றுள்ள நிலையில், தலைமைப் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.