டாஸ்மாக் கடை முன் தொழிலாளி மர்ம சாவு..

கோவை சரவணம்பட்டி, கரட்டு மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1714 ) முன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அங்குள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த பென்னி மேத்யூ (வயது 54) என்பது தெரிய வந்தது. இவர் அங்குள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . கடந்த 10 மாதங்களாக சரிவர வீட்டுக்கு செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை முன் பிணமாக கிடந்தார். அவரது வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. உதட்டில் காயமும் உள்ளது. இவர் எப்படி செத்தார் ? என்று தெரியவில்லை. இது குறித்து இவரது மனைவி பென்சி பால் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.