கோவை டாஸ்மாக் கடை முன் தொழிலாளி அடித்து கொலை – ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது..!

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 40 ) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 250 கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இன்று காலை கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் லட்சுமணன் ஆத்திரமடைந்து கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் அதே இடத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணனை கைது செய்து போலீசாரை விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.