பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக் கேட்ட இருவருக்கு கத்தி குத்து- தொழிலாளி கைது..!

கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தினார். பின்னர் அவர்களை மிரட்டி விட்டு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார். இதையடுத்து கத்தி குத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வெறைட்டி ஹால் ரோடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இருவரையும் கத்தியால் குத்தியது கோவை தெற்கு உக்கடம் அல் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்த தொழிலாளி ரிஸ்வான் (33) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான ரிஸ்வான் மீது அடிதடி, போக்சோ உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.