சூலூர் தனியார் நிறுவன குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!!

கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் ஒரு தனியார் நிறுவன குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் போலீசார் நேற்று அந்த குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இந்த அரிசியை சூலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து வாங்கி வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.