பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் – ஐந்து மொழிகளில் பிரதமர் மோடி வேண்டுகோள்.!!

புதுதில்லி: மக்களவைக்கான 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதோடு, அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டை விட ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என 88 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க வாக்குச் சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவும் நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் பெண் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பெண்கள், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதிகயளவு வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. உங்கள் வாக்கு உங்கள் குரல்! என மோடி தெரிவித்துள்ளார்.