குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..! 

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..!  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சிக்குஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டவர்கள் பாப்பம்பட்டி நால்ரோடில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும்சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் .இந்த பிரச்சனைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர் .இதையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.