தாளவாடி மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் பலி..

சத்தியமங்கலம் : கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கண்டேகணுவி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி ஜோதி (26). கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி கடந்த 8 மாத காலமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வயர் மூலம் மின்சாரம் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி துணி துவைத்துவிட்டு துணிகளை உலர வைப்பதற்காக வீட்டின் அருகில் இருந்த கம்பியில் துணிகளை உலர வைக்கும் போது எதிர்பாராத விதமாக கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஜோதி மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஜோதியை மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தாளவாடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜோதிக்கு ரக்ஷனா என்ற 4 வயது மகள் உள்ளார். இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.