அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் – செங்கோட்டையன்..!

திமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பந்தல்கால் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையப் போகிறார்கள். யார், யார் தேர்தலில் உதவி செய்வார்கள் என்பது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து அறிவிப்பார். வேட்பாளர் தேர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி நாளை நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி, சில முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறார்.

போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெற்று யார் போட்டியிடுவது என்பதை ஆட்சி மன்ற குழு முடிவு செய்து அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும். இந்த முடிவு தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். வீடு வீடாக அமைதியான முறையில் சென்று தேர்தல் பணியாற்றும் வகையிலும் எங்கள் பணி இருக்கும். மற்றவர்கள் சொல்வதைப் போல் இந்த தேர்தல் எளிதான வெற்றியாக அவர்களுக்கு அமையாது. அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் யாரை அறிவிக்கிறாரோ, அவருக்கு ஆதரவாக நாங்கள் களத்தில் இருக்கிறோம். பாஜகவின் ஆதரவு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலை சின்னம் முழுமையாக எங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்’ என்றார்.