அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு-10 பேர் உயிரிழப்பு ..!

லிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று  இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண் என்பதை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் சார்ஜென்ட் பாப் போஸ் கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஆசிய மக்கள்தொகை கொண்ட சுமார் 60,000 மக்கள் வசிக்கும் நகரமான மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து அருகில் உள்ள கிளாம் ஹவுஸ் கடல் உணவகத்தின் உரிமையாளரான சியுங் வோன் சோய், மூன்று பேர் தனது உணவகத்திற்குள் விரைந்து வந்து உடனடியாக கதவைப் பூட்டச் சொன்னார்கள் என தெரிவித்தார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மிஷின் கன் வைத்திருந்ததாகவும் குண்டுகளை ரீலோட் செய்ய பல புல்லட்டுகள் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் கூறினார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் தெரியவில்லை. உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் அணி வகுத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வளைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.