புகை பிடிக்க பீடி தர மறுத்த மனைவி – கணவர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மதுக்கரையை அடுத்த வலுக்குப்பாறையை சேர்ந்தவர் காளிசாமி (வயது 60). தொழிலாளி.

அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதற்காக அவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். காளிசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. சிகிச்சை பெற்று வருவதால் டாக்டர் அவரை புகை பிடிப்பதை கைவிடுமாறு அறிவுரை கூறினர். இதனால் அவரது மனைவி அவரை புகை பிடிக்காமால் பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று காளிசாமி தனது மனைவியிடம் புகை பிடிக்க வேண்டும் என கூறி பீடி கேட்டார். ஆனால் அவர் தர மறுத்து அவருக்கு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.