கோவையில் களைகட்டியது கிறிஸ்துமஸ்: கண்கவர் பொம்மைகள்,வண்ண அலங்கார விளக்குகள் விற்பனை மும்முரம்..!

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், அழகிய வண்ண ஸ்டார்கள், பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது.

இதையொட்டி கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை வண்ண நட்சத்திரம் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிப்பார்கள்.
இயேசு கிறிஸ்து பிறந்ததை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைத்து அலங்காரம் செய்வார்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் வைக்க கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம். குடில்களை வாங்கி செல்கிறார்கள்.
கோவையில் டவுன் ஹால் 5 முக்கு சாலை, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், ஏஞ்சல் பொம்மைகள், ஸ்டார்கள், வாழ்த்து அட்டைகள், மணிகள், அலங்கார பொருட்கள் விற்பனையாகி வருகின்றன.

கண்கவர் பொம்மைகள் கண்ணை கவரும் வகையில் கிறிஸ்துமஸ் பொருட்கள் சிவப்பு வண்ணங்களில் இடம் பெற்று உள்ளன. கைவினை கலைஞர்கள் வடிவமைத்த அழகியபொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் மரங்களில் தொங்கவிடும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.வண்ண அலங்கார விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், தொப்பிகள், உடைகள் ஆகியவை விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன. மேலும் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள், சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.