கோவையில் காவல்துறையினருக்கான ஓட்டுப்பதிவு – 2 நாட்கள் நடக்கிறது.!!

கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டி ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக்கூடத்தில் இதற்கான வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துணை கமிஷனர் சுஹாசினி மற்றும் போலீஸ் அதிகாரிகள் , போலீசார் வரிசையில் நின்று நேற்று தபால் ஓட்டு போட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த போலீசார் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தபால் ஓட்டு போடுவற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 4 மணி வரை 880 போலீசார் தபால் ஓட்டு போட்டனர். இன்றும் ( திங்கள் கிழமை) தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.