வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது – அறங்காவலர் தலைமறைவு!!!

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது.

பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு.

கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து இருந்தார்.

அந்த புகார் மனுவில் வன பத்ரகாளியம்மன்  கோவில் பூசாரிகள்  ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்து உள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட ஐவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி மேட்டுப்பாளையம் போலீசார் வன பத்ரகாளியம்மன்  பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட ஐவர் மீது கடந்த 3 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் வன பத்ரகாளியம்மன்  கோவில் பூசாரிகள்  ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இருந்த நிலையில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.