நினைத்து பார்க்காத வெற்றி.. மீண்டும் தமிழகத்தில் விசிலடித்த குக்கர்.!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பெறாத அமமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, இனிமேல் இந்த கட்சியில் இருந்தால் நமக்கு எதிர்காரம் இருக்காது என்று நினைத்து முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால் டிடிவி.தினகரன் கடும் அதிருப்பதியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மாநகராட்சிகளில் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை 146 வார்டிலும், தஞ்சாவூர் மாநகராட்சி 36 வது வார்டிலும், திருச்சி மாநகராட்சி 47வது வார்டிலும் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

நகராட்சிகளைப் பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் 13, 15, 24 ஆகிய வார்டுகளிலும், தேவக்கோட்டை நகராட்சியின் 4, 6, 17, 22, 23 ஆகிய வார்டுகளிலும், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியின் 21வது வார்டிலும், முசிறி நகராட்சியின் 14, 16 வார்டுகளிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியின் 23 மற்றும் 33வது வார்டுகளிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியின் 29வது வார்டிலும், தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சியின் 7, 17 வது வார்டிலும், பெரியகுளம் நகராட்சியின் 2, 10வது வார்டிலும், புதுக்கோட்டை நகராட்சியின் 11வது வார்டிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் 3 வார்டிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 18, 28வது வார்டுகளிலும், மேலூர் நகராட்சியில் 2வது வார்டிலும், அரக்கோணம் 31வது வார்டிலும், சோளிங்கரில் 6, 19, 22,27 ஆகிய வார்டுகளிலும், இராமநாதபுரம் 4வது வார்டிலும், சாத்தூர் 22வது வார்டிலும், விருதுநகர் 6வது வார்டிலும் என மொத்தம் 33 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், பேரூராட்சிகளில் 66 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 வார்டுகளில் வென்று ஒரத்தநாடு பேரூராட்சியை டிடிவி தினகரனின் அமமுக கைப்பற்றியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.