கள ஆய்வில் முதல்வர் திட்டம் : வேலூர் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

ள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ரயில் மூலமாக நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கையே தங்கியிருந்து, இன்று அதிகாலையிலேயே தனது கள ஆய்வு பணியினை தொடங்கினார். முதலில் சத்துவாச்சாரி, பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தினை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யும் உணவு கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்தார். பிறகு சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியை ஆய்வு செய்விட்டு, அங்கிருந்து கிளம்பி அலமேலுமங்காபுரம் நடைபாதை பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த குழந்தைகளிடம் சிரித்த முகத்தோடு கண்ணங்களை கிள்ளி மகிழ்ந்த அவர், பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்யும் இடத்திற்கு சென்று உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தையும் ஆய்வு செய்து, பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மண்டலத்துக்குபட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதில் தலைமை செயலாளர் இறையன்பு உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள், பொதுமக்களின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார் .

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற உள்ள இந்த கள ஆய்வை முடித்துக்கொண்டு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகநின் வீட்டுக்குச் சென்று அங்கு மதிய உணவுக்குப் பிறகு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது .