ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம்: 140 நாடுகள் ஆதரவு- இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் புறக்கணிப்பு.!!

நியூயார்க்: ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஒரு மாதம் ஆகிய நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி அளித்துள்ளது.

குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வடா கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்ததால் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலை தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புவதாகவும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்த எதுவாக விரோத போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி குறிப்பிட்டார். மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண இரு தரப்பையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.