துபாயில் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் உலக பொருட்காட்சியினல் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கைத் திறந்து வைக்க உள்ளார்

நேற்று மாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் அங்கு சென்றடைந்தார். முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் மற்றும் அரசு அதிகாரிகள் என 15 பேர் தனி விமானத்தில் சென்றனர்.

நேற்று முதல்வர் ஸ்டாலினை துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய அமீரகத்துக்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, அரசு உயர் அலுவலர்கள் இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை ஆகியோர் வரவேற்றனர். தவிர சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஏராளமான திமுகவினர், தமிழர்கள், அரசு அதிகாரிகளும் உற்சாகமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

பிறகு துபாய் அரசு ஏற்பாடு செய்த காரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று இரவு துபாயில் அவர் தங்கினார். துபாயில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு வாரமாக மார்ச் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

இன்று இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் அரங்கில் தொடர்ச்சியாகத் திரையிடப்பட உள்ளன.

மேலும் துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். அதற்குப் பிறகு அபுதாபிக்கு சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். முதல்வர் இந்த இரு நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய 4 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, 29ஆம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.