போர் தொடங்கியதிலிருந்து 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளது – ரஷ்யா அதிர்ச்சி தகவல்.!!

சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.

ரஷியாவின் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதனால் கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனை ஓரிரு நாட்களில் ரஷ்யா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் நிதியுதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும், இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதலால் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அவற்றை மீட்பதற்கான முயற்சியில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உக்ரைனின் முயற்சிகளை முறியடிக்க ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

மூன்றாவது ஆண்டாக தொடரும் இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இருநாடுகளுமே கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறுகையில், ” சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளன. உக்ரைன் ராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷியா அழித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.