ம.பியில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்-காவல் ஆய்வாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்.!!

மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை விமர்சித்ததாக நாடக கலைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பத்திரிகையாளர், யூடியூபர் என 8 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த சித்தி நகர போலீசார், 8 பேரின் ஆடைகளை கலைந்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, எஸ்.பி ஸ்ரீவஸ்தாவா கூறும்போது, நாடக கலைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யூடியூபர் என சுமார் 40 பேர் கொண்ட குழு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தான் முற்றுகையில் ஈடுபட்டவர்களில் 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எனினும் அவர்கள் ஆடைகள் களைய வைக்கப்பட்டது ஏன்? யார் அப்படி செய்தாளர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, சித்தி காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கைதானவர்கள் முழுமையாக நிர்வாணப்படுத்தப்படவில்லை எனவும், அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே ஆடைகளை கலைந்ததாகவும், மத்திய பிரதேச காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.