சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை.!!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி. T.துணை வாசல் ஊரைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர், கூலி வேலை செய்பவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சாலை விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (14.02.2024) அன்று இரவு 11.00 மணியளவில் மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு (15.02.2024) அன்று இரவு 08.33 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட ஒரு சிறுநீரகம் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. திருச்சி மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.D.நேரு., MD., DMRD.,தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch., மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் மரு.நூர்முகமது, MD., DM., மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் மரு.சந்திரன் MD, மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார்.
இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி அரசு மருத்துவர்களை அரசு டீன் வெகுவாக பாராட்டினார்