நூல் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி..!

கோவை போத்தனூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ( வயது 56) நூல் வியாபாரி இவர் தனது செல்போனில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருக்கிறதா? என பார்த்து உள்ளார். அப்போது ஒரு மணி நேர பகுதி நேர வேலை இருப்பதாக வந்த லிங்கை நடராஜன் தொடர்பு கொண்டபோது தாங்கள் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக “அலி செஸ் ” என்ற செயலியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.. அந்த செயலியை நடராஜன் பார்த்தபோது முதலீ ட்டுக்கு தகுந்த லாபத் தொகையை தருவதாக கூறியதால் நடராஜன் தன்னிடம் இருந்து பணத்தை படிப்படியாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் நடராஜன் செலுத்திய தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோசடி ஆசாமிகளும் போலி கணக்கை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரூ 19 லட்சத்து 79 ஆயிரத்தை அனுப்பிய பின்னர் லாபத்தொகை மற்றும் செலுத்திய தொகை திரும்ப வரவில்லை. இது குறித்து அவர்களை தொடர்பு கொண்ட போது ரூ 4 லட்சத்து 79 ஆயிரத்தை மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு ரூ. 15 லட்சத்தை திருப்பி தரவில்லை. மோசடி செய்து விட்டனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த நடராஜன் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.