இன்று சிங்கப்பூர் அதிபராக பதவியேற்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்..!

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார்.

சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதிபராக இன்று பதவியேற்கும் தர்மன் சண்முகரத்னம், கடந்த 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாத்தா, பாட்டி ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். சண்முகரத்னத்தின் தந்தை கனகரத்தினம் மருத்துவத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.

சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவரது மனைவி ஜேன் யுமிகோ இடோகி. முன்னாள் வழக்கறிஞரான இவர் சமூக சேவகியாகவுள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.

சண்முகரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்கத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றியவர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.