மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு – இன்று சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு.!!

கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக அட்சியில் இருந்தபோது சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து,தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார்.இதனால்,இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்பி வேலுமணியிடம் வழங்குவோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில்,தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.