தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இறப்பு இல்லை… செய்தி போட்டு பெரிதுபடுத்த வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாக் ட்ரில் நடத்த மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் அனைத்து மருத்துமனைகளிலும் இந்த மாதிரி பயிற்சி நடைபெருகிறது. தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். மற்ற மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த மாதிரி பயிற்சியை ஆய்வு செய்வார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு இந்திய அளவில் ஒரு நாள் பாதிப்பு 5000 -திற்கும் மேல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டில்லியில் அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 329 பேருக்கு பாதிப்பு உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு உள்ளானவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவது தற்போது குறைவாகத்தான் இருக்கிறது.

ஏற்கனவே, இரண்டாம் அலையில் டெல்டா, டெல்டா பிளஸ் பாதிப்பில் தீவிரமடைந்து உடனடியாக ஆக்சிஜன் தேவை இருந்தது. பின்னர் மூன்றாம் அலையில் பாதிப்பின் தீவிரம் குறைந்தது. அடுத்தடுத்த அலைகளிலும் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள 4 ஆம் அலையில் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசி, முக கவசங்கள், தனி நபர் பாதுகாப்பு கவச உடை எவ்வளவு உள்ளது என்பதையும், ஆக்சிஜன் ஜெனரேட்டர், திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது, 64,281 படுக்கைகள் தயாராக உள்ளது. அவற்றில் 33,624 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. 24,061 ஆக்சிஜன் கான்ஸ்டன்ஸன், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள், 267 மெட்ரிக் டன் திரவ நிலை சேமிப்பு களன்கள் உள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து 342 இடங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை இடங்கள் உள்ளது. அதன் மூலம் தேவைக்கு ஏற்ப 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். தற்பொழுது 4500 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனை 11 ஆயிரம் பேர் வரை அதிகரித்து ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

அப்போது ஒரே இடத்தில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனி நபர் பாதிப்பு என்பதால் அறிகுறிகள் இருக்கும் போது மட்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2000 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதியும், கரோனாவுக்கு படுக்கை வசதிகளும் உள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு அமைக்கப்பட்ட முகாம்களை பொருத்தவரை 53,205 முகாம்கள் 11,159 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இப்போது நலமுடன் உள்ளார்கள். இன்புளயன்சா காய்ச்சல் தமிழ்நாட்டில் முழுவதும் குறைந்து விட்டது. மத்திய அரசு முன்களப்பணியாளர்களக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தடுப்பூசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில், 5500 இன்புளுயன்சா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு முன் கள பணியாளர்களுக்கு, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களபணியாளர்கள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்தால் அதன் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்துவது குறித்தும் அறிவிக்கப்படும்.

தற்பொழுது இறந்த 3 பேரும் கரோனா பாதிப்பால் மட்டும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. வயது மூப்பு, நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இணை நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். இணை நோய்கள் தான் இறப்புக்கு காரணம். மேலும் மாணவர்கள் தற்கொலை தொடர்பான கேள்விக்கு, நீட் தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் யாரும் இறக்கவில்லை” என தெரிவித்தார்.