பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது..!

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39). இவர் அதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சரவணன் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சரவணன் மீதான இந்த நடவடிக்கை போதாது, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண் போலீஸ் வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.