16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த 16 வயது சிறுமி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு
இவருக்கு செம்மேட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீதர் (வயது 20)
என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும்
தீவிரமாக காதலித்து வந்தனர்.

ஸ்ரீதர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து
சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் அவர் திருமணம் செய்வதாக ஆசை
வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக
சிறுமி கர்ப்பமானார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே
அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்ரீதரின் பெற்றோரை தொடர்பு
கொண்டு 2 பேருக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். ஆனால் சிறுமி
மைனர் என்பதால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

கடந்த 1 -ந் தேதி ஸ்ரீதர் சிறுமியை அழைத்து சென்று அந்த பகுதியில் உள்ள
விநாயகர் கோவிலில் வைத்தது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தார்.
பின்னர் அவர் சிறுமியுடன் தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6-ந்
தேதி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை
கண்டு பிடித்தனர். மேலும் அவர் மைனர் பெண் என்பதையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் இது குறித்து டாக்டர்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல்
தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது
சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஸ்ரீதரை
கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.