சிறுத்தையை வேட்டையாட துரத்திய புலி… மரத்தில் ஏறி எஸ்கேப் ஆன சிறுத்தை..!!

காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை புலிகள் வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள்.

சிறுத்தையை புலி வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?. அப்படியான சம்பவம் ஒன்று நடைபெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன் உயிரை காத்துக் கொள்கிறது.

புலி மற்றும் சிறுத்தை இரண்டுமே ஆக்ரோஷமாக வேட்டையாடும் விலங்குகள். இருந்தும் அவைகள் வேட்டையாடும் போது வெவ்வேறு வித யுக்திகளை பயன்படுத்தி தனது இரையை பிடிக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சிறுத்தை மற்றும் புலிகள் ஆகிய இரண்டுமே பெரும்பாலும் ஒரே பகுதிகளில் வசிக்கும் விலங்குகளாக இருக்கின்றன. இரை தட்டுப்பாடு இல்லாத காலங்களில் இரு விலங்குகளுமே பெரிய அளவிலான மோதலை சந்திக்காமல் இருந்தாலும், இரை தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் புலிகள் இரையைப் பெறுவதற்கான முயற்சியில் சில சமயம் சிறுத்தைகளையும் வேட்டையாடுமாம்.

அந்த வகையில் வைரலாகியிருக்கும் வீடியோவில் ஒரு புலி திடீரென மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று எதிரே இருந்த சிறுத்தையை பிடிக்க முயல்கிறது. அப்போது புலியை கண்டு அதிர்ச்சியான சிறுத்தையோ உயிருக்கு பயந்து வேகமாக மரத்தில் ஏறி தப்பிக்கிறது. ஆனாலும், விடாமல் புலி அதே வேகத்தில் மரத்தில் ஏறி சிறுத்தையை பிடிக்க முயன்றபோதும், அதன் முயற்சி எடுபடவில்லை. இதனால் பாதி தூரம் வரை மட்டுமே ஏறிய புலி மரத்தில் இருந்து மெல்ல கீழே இறங்குகிறது.

இந்த பரபரப்பான 30 விநாடி விடியோ யூடியூப்பில் வைரலாகியுள்ளது. புலிகள் எளிதில் மரங்களில் ஏற முடியும், அவற்றின் கூர்மையான மற்றும் உள்ளிழுக்கும் நகங்கள் மரத்தின் தண்டுகளைப் பிடித்து மேலே ஏறுவதற்கு சக்திவாய்ந்த பிடியை கொடுக்கிறது. ஆனால், வயதாகும் போது புலிகளின் உடல் எடை காரணமாக ஏற முடியாது. அதனால் அந்த சிறுத்தை புலியிடம் இருந்து தப்பித்துவிட்டது.