ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில்  கலெக்டர் அலுவலகம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழி யர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் என 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து வட்டாரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி மறியல் போராட்டம், 22-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சிதுறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். ஊரக வளர்ச்சிதுறை போராட்டம் காரணமாக ஊராட்சி பகுதிகளில் குடிநீர், 100 நாள் திட்டப் பணிகள், அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..