பைனான்ஸ் அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது.!!

கோவை துடியலூர் அருகே உள்ள ஜி. என். மில் ,மீனாட்சி கார்டன் , 3 – வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 33 ) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை மிரட்டி பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டைப் பையில் இருந்த 1200 ரூபாயை கொள்ளை அடித்தார். உடனே கார்த்திகேயன் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த அசாமியை கையும் களவுமாக பிடித்து ஆர். எஸ். புரம். போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரத்தினபுரி, பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 34) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து கத்தியும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.