கடைக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்- போலீசில் பிடித்து கொடுத்த கல்லூரி மாணவர்..!

கோவையில் கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்த கடையின் உரிமையாளர் மீது கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அக்கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அந்தக் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார். அப்போது ராமு அவரது செல்போனில் ஏதோ ஒரு வீடியோவை பார்த்து கொண்டிருந்த நிலையில் போனை ஆஃப் செய்யாமலேயே மேசையின் மேல் வைத்துள்ளார். அந்த செல்போனில் மாணவருக்கு தெரிந்த மாணவியின் வீடியோ இருந்துள்ளது. இதை பார்த்த அம்மாணவர் உடனடியாக ராமுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பி செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார். அப்போது அந்த செல்போனில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் வீடியோக்கள் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து ராமு அந்த மாணவரிடமிருந்து செல்போனை பிடுங்கிக் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். பின்னர் அம்மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ராமுவிற்கு திருமணம் ஆகி அவரது மனைவி உயிரிழந்த நிலையில் ஒரு குழந்தை இருப்பதும், ராமு அவரது கடைக்கு வரும் அல்லது கடைக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது இது குறித்து காவல்துறையினர் ராமுவிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.