கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு..!

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுந்து செல்ல கூறினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கணபதி விளாங்குறிச்சி பகுதியில் ஒரு இடத்தை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வந்தேன். அந்த இடத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.