ஒற்றை தலைமையை கையிலெடுத்து வான்டாக சிக்கி கொண்ட தலை.. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்து விடுவானே … அடுத்து என்னாகுமோ…

சென்னை: எடப்பாடி பழனிசாமி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவருக்கே பலவிதமான சறுக்கல்களை தந்து வருகிறதாம்..

அத்துடன் இவையெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கும் பிளஸ் பாயிண்ட்களாகவே அமைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம்.

எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கருதப்பட்ட நிலையில், திடீரென அதிமுக விவகாரம், வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்குள் மட்டுமே வாதங்களாக நடந்து வந்த விஷயம், இப்போது சட்டரீதியாக விஸ்வரூபமெடுத்துள்ளது..

எப்போது சட்ட ரீதியான நடவடிக்கையை ஓபிஎஸ் கையில் எடுத்தாரோ, அப்போதே எடப்பாடிக்கு பெரும் சிக்கலையே அது ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ அனுப்பியிருந்த மனுவில், “அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னுடைய ஒப்புதல் இன்றி வருகிற 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று முறையிடப்பட்டுள்ளது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பேயே ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தை இப்படி நாடுவார் என்றும், இறுதியில் இரட்டை இலையையே முடக்கவும் செய்வார் என்று யூகிக்கப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் சொல்லி வைத்ததுபோலவே, புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.. இப்போது இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாலும், ஓபிஎஸ், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்றதே எடப்பாடிக்கு விழுந்த சறுக்கலாக பார்க்கப்படுகிறது.

அதாவது, நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டத்துக்குள் எடப்பாடி சிக்கி கொண்டுள்ளார்.. ஏற்கனவே ஹைகோர்ட்டில், இதே விவகாரத்தினால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது… இப்போது என்ன செய்வதென்று தெரியாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம்கோர்ட்டை நாடி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. சுப்ரீம்கோர்ட்டே சென்றாலும், எடப்பாடிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்காது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இதுவும் எடப்பாடிக்கு விழுந்த இன்னொரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த ஆதரவும் தனக்கு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தபோது, ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை கோர்ட் ஏற்று கொண்டதையே, எடப்பாடி எதிர்பார்க்கவில்லையாம்.. இப்போது விஷயம் என்னவென்றால், ஓபிஎஸ்ஸுக்குதான் வெற்றி என்று இப்போதே, அவரது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்து விட்டனராம்.. “தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் சென்றால், பின்னாடியே சிவி சண்முகம் தரப்பில் ஏன் பதில் மனு தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும்? அப்படி என்றால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான் என்பதை எடப்பாடி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது என்றுதானே அர்த்தம்? அந்த பயம் இருக்கட்டும்” என்று கெத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார்களாம்.. இதுவும் எடப்பாடிக்கு சறுக்கலையே தந்து வருகிறது.

அதுமட்டுமல்ல, பொதுக்குழுவுக்கு வருகை தந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை.. வருகைப்பதிவேடும் முறையாக இல்லை, அதிலும் கலந்து கொண்டவர்களில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் என்றும் உறுதியாக தெரியவில்லை.. போதாக்குறைக்கு, அந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர், எடப்பாடியின் உறவினர்கள் கூட கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.. எனவே, இது தொடர்பான உண்மையான ரிப்போர்ட்டை ஓபிஎஸ் கேட்டுள்ளாராம்.. அந்த பொதுக்குழு நடந்த வீடியோவை, ஆதாரமாக திரட்டி, ஓபிஎஸ் கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளாராம்.. ஒருவேளை போலி உறுப்பினர்கள், பொதுக்குழுவில் இடம்பெற்றிருப்பது நிரூபணமானால், அதுவும் எடப்பாடிக்கு சறுக்கலாகவே பார்க்கப்படும் என்கிறார்கள்.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சொல்லும்போது, “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டார் எடப்பாடி.. இந்த நேரத்தில் ஒற்றை தலைமை என்ற பேச்சை இவர் ஏன் ஆரம்பிக்க வேண்டும்? அதற்கான அவசியம் இப்போது என்ன வந்தது? 2 மாதத்துக்கு முன்பு எதற்கு, ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்த வேண்டும்? ஓபிஎஸ்ஸை ஒரேடியாக புறக்கணிக்கும் அளவுக்கு இந்த 2 மாத காலத்தில், அப்படி என்ன ஓபிஎஸ செய்துவிட்டார்? சிவி சண்முகம் போன்ற சட்டரீதியான பலத்தை தன் பக்கம் வைத்து கொண்டு, தீர்மானங்களை நிராகரித்து, இன்று சட்டத்தின் இடியாப்ப சிக்கலில் எடப்பாடியே வான்டாக சிக்கி கொண்டு விட்டாரே.. கோர்ட் + இந்திய தேர்தல் ஆணையம்” முடிவு மட்டுமே, அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வை எடுத்து செல்லும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.