இழப்பீடு வழங்காத அரசு பஸ் 2-வது முறையாக மீண்டும் ஜப்தி..!

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பிஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்த தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் தொடர்ந்து சதீஷ் குடும்பத்தினர் கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019ம் ஆண்டு சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சம் வழங்க கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ. 16 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ. 7 .40 லட்சம் இழப்பீடு தொகை வழங்கினர். மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அந்த தொகையை ஒரு மாதம் ஆகியும் செலுத்தவில்லை. இதனால் அந்த அரசு பஸ் 2-வது முறையாக மீண்டும் ஜப்தி செய்யப்பட்டது.