மண்டைக்காடு பகவதி கோயிலில் 85 ஆண்டுகளாக நடக்கும் சமய மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்- அண்ணாமலை..!

சென்னை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் 86-வது ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி கொடைவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் அருகே ஹைந்தவ சேவா சங்கத்துக்கு சொந்தமான இடத்தில், கடந்த 1936-ம் ஆண்டு முதல் மாசி கொடைவிழாவின்போது, அரங்கம் அமைத்து இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதில், வீரம், பக்தி, வரலாறு தொடர்பான சமய வகுப்புகள், கலைகள், நாடகங்களை ஹைந்தவ சேவா சங்கத்தினர் நடத்துகின்றனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, சமய புலவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான உதவிகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான 86-வது இந்து சமய மாநாட்டை மார்ச் 5 முதல் 14-ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், ஹைந்தவ சேவாசங்கம் இந்த மாநாட்டை நடத்தகூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 85 ஆண்டுகளாக நடந்து வரும் சமய மாநாட்டை, எந்த காரணமும் இல்லாமல் தடுக்கமுயல்வது, திமுக அரசின் இந்து மதவிரோதப் போக்கையே காட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

ஹைந்தவ சேவா சங்க அமைப்பின் ஆன்மிகப் பணிகளை தடுப்பதன் மூலம், யாரையோ மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் இருந்தால், அவர்களது எண்ணம் தவறானது. மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாத திமுக அரசு, இதுபோல மக்களைபிளவுபடுத்தும் தீய எண்ணத்தில் செயல்படுவதையும், பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை என்பது ஆலய மேம்பாட்டுக்கே தவிர, ஆளுங்கட்சியின் கொள்கைகளை புகுத்துவதற்கு அல்ல. இதை திமுக அரசு உணர வேண்டும். எனவே, மண்டைக்காடு கோயிலில் நடக்கும் 86-வது ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.